ஷா ஆலம், அக் 21- நேற்று பெய்த அடை மழை காரணமாக ஷா ஆலம், செக்சன் 13 பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவலை ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுத்துள்ளது.
அப்பகுதியில் தமது தரப்பு மேற்கொண்ட சோதனையின் போது அத்தகைய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வெள்ளம் தொடர்பான காணொளி கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தின் போது பதிவு செய்யப்பட்டதாகும் என்று அது தெரிவித்தது.
உண்மைக்கு மாறான செய்திகளை அல்லது காணொளிகளை பகிர வேண்டாம் என பொதுக்களை கேட்டுக் கொள்கிறோம். இதனால், பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் ஏற்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகர் மன்றத்தின் அதிரடி நடவடிக்கைப் பிரிவு எந்நேரமும் விழிப்பு நிலையில் உள்ளதோடு தீவிர கண்காணிப்பு பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அது கூறியது.