கோலாலம்பூர், அக் 22- நவம்பர் மாதம் தொடக்கம் வரை ஏற்படும் பருவநிலை பெயர்வு காரணமாக உண்டாகக்கூடிய வெள்ளப் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கும்படி தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு அருகில் வசிப்போர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பல்வேறு திசைகளிலிருந்து வரும் காற்று பலமிழக்கும் காரணத்தால் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் குறுகிய நேரத்திற்கு இடி, மின்னலும் பலத்தக் காற்றுடன் கூடிய அடைமழையும் பெய்வதற்குரிய சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது போன்ற அதீத வேகத்தில் பெய்யும் அடை மழையினால் குறுகிய நேரத்தில் ஆறுகளில் நீர் கரைபுரண்டோடி அருகிலுள்ள குடியிருப்புகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது கசாலி கூறினார்.
ஆறுகளில் நீரோட்டம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அந்த நீர் வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்துவதையும் குப்பைகளை வீசுவதையும் தவிர்க்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளத்தை எதிர் கொள்வதற்காக வெள்ளத் தடுப்புத் திட்டம், ஒருங்கிணைந்து ஆற்றோர மேலாண்மைத் திட்டம், சுற்றுச்சூழல் நட்புறவு வடிகால் பெருந்திட்டம் ஆகியவற்றை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை அமல்படுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆறுகள், நீர் சேகரிப்பு குளங்கள் மற்றும் வடிகால், நீர்பாசனதுறைக்கு சொந்தமான அடிப்படை வசதிகளை பராமரிக்கும் பணிகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.