ஷா ஆலம், அக் 23- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 முதல 17 வயது வரையிலான இளையோரை இலக்காக க்கொண்ட செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நாளை தொடங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள 3,416 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் தாபிஷ் ஒருங்கிணைந்த மாஹாட் பள்ளியில் பயிலும் 1,235 மாணவர்கள், 1,181 ஒருங்கிணைந்த சமயப் பள்ளி மாணவர்கள், 1,000 தாபிஷ் மாஹாட் மாணவர்களை இத்திட்டம் தற்போதைக்கு உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.
பள்ளிகளைத் மீண்டும் திறக்கும் நடவடிக்கை சீராக மேற்கொள்வதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கிலான இத்திட்டம் பண்டமாரான் தொகுதி நிலையில் தொடங்குகிறது. பண்டமாரான் ஜெயா, சமூக மண்டபத்தில் இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
மேலும், கோலக் கிள்ளான் தொகுதி, தஞ்சோங் சிப்பாட் தொகுதி மற்றும் புக்கிட் லஞ்சான் தொகுதியில் கலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து 150,000 தடுப்பூசிகளை உள்ளடக்கிய இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி புசார் இம்மாதம் 7 ஆம் தேதி கூறியிருந்தார்.