ஷா ஆலம், அக் 29- வரும் பொதுத் தேர்தலில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்கு ஏதுவாக மாநில அமைப்புச் சட்டத்தில் சிலாங்கூர் அரசு திருத்தம் செய்யவுள்ளது.
வரும் நவம்பர் 26 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது இந்த வாக்குரிமை தொடர்பான சட்டமும் திருத்தப்படும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் கூறினார்.
சிலாங்கூர் மாநில அமைப்புச் சட்டத்துடன் தொடர்புடைய 18 வயதினருக்கான வாக்குறுரிமை மீது நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம். அதே சமயம், சிலாங்கூரிலுள்ள இளைஞர் அமைப்புகள் ஒரே அமைப்பின் கீழ் செயல்படுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் இளைஞர் செயலாக்க மன்றச் சட்டமும் வரையப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புச் சந்தையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
18 வயதினர் வாக்களிக்கும் நடைமுறையும் இயல்பாக வாக்காளராகும் பதிவும் வரும் பிப்ரவரி 2022 தொடங்கி பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி வான் இஸ்மாயில் கூறியிருந்தார்.