ஷா ஆலம், அக் 26- அடுத்தாண்டிற்கான தொழிற்சாலை மற்றும் வர்த்தக மையங்களுக்கான உரிமத்தை புதுப்பிக்கும் இயக்கத்தை கோல லங்காட் நகராண்மைக் கழகம் தொடக்கியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 10.00 மணி தொடங்கி வணிக மையங்களின் உரமையாளர்கள் மாவட்ட முழுவதும் உள்ள 14 நடமாடும் முகப்பிடங்களில் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அக்கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் போது கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனத்தின் திடக்கழிவு அகற்றுவதற்கான நியமனக் கடிதத்தை சமர்பிக்க வேண்டும் என்று அது தெரிவித்தது.
சலவை நிலையங்களைப் பொறுத்த வரை எரிவாயுவை பயன்படுத்துவதற்கான அனுமதியை எரிசக்தி ஆணையத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
குற்றப்பதிவுகள், வாடகை பாக்கி, மதிப்பிட்டு வரி பாக்கி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்நோக்காத வர்த்தக மையங்கள் எந்த சிக்கலுமின்றி உரிமத்தை புதுப்பிக்கலாம்.