கோலாலம்பூர், அக் 30- கெடா, பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் பலத்தக் காற்று, பேரலைகள் மற்றும் கனத்த மழை பெய்யும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமது கசாலி கூறினார். கடல் பெருக்கெடுக்கும் காரணத்தால் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
கெடா மாநிலத்தின் கோலா மூடா, பேராக்கில் பாகன் டத்தோ, சிலாங்கூரில் கிள்ளான், கோல லங்காட், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் மற்றும் ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான், பத்து பஹாட் ஆகிய பகுதிகள் அபாயம் மிகுந்தவையாக கருதப்படுகின்றன என்றார் அவர்.
பொது மக்கள், குறிப்பாக கடலோரங்களில் வசிப்பவர்கள் இந்த கடல் பெருக்கை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு வானிலை அறிக்கையை பின்பற்றி நடக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், கடற்கரைகளில் நீர் நடவடிக்கைகள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மேற்கொள்ளாமல் இருக்கும்படியும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.