கிள்ளான், நவ 2– இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவ மழை மற்றும் கடல் பெருக்கை எதிர் கொள்ள கிள்ளான் மாவட்டத்தில் 71 தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கேற்ப பள்ளிகள் மற்றும் மண்டபங்கள் இந்நோக்கத்திற்காக தயார் செய்யப்பட்டுள்ளன என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் இடைக்காலத் தலைவர் முகமது ஷரிசால் முகமது சாலே
கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினா பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் தங்க வைப்பதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த தற்காலிக துயர் துடைப்பு மையகள் தொடர்பான தகவல்களை 03-33716700 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
கம்போங் ராஜா ஊடா தேசிய பள்ளி, மெத்தடிஸ்ட் தேசிய பள்ளி, போர்ட் கிள்ளான் தேசிய பள்ளி, செக்சன் 19 எம்.பி.எஸ்.ஏ. மண்டபம் தாமான் செந்தோசா மண்டபம் ஆகியவை தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் சிலவாகும்.
இந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி பொதுப்பணித்துறை மற்றும் வடிகால், நீர் பாசனத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக முகமது கூறினார்.