ஷா ஆலம், நவ 8- இவ்வாண்டு முழுவதும் 1,084 வசதி குறைந்த பி40 குடும்பங்களுக்கு ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது.
நம்பிக்கைப் பெட்டி என பெயரிடப்பட்ட இந்த உணவுப் பொட்டலங்கள் மாவு, பால், அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை உள்ளடக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ள ஏழைகளுக்கு இந்த உணவுப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதை இலக்காக கொண்ட முன்னோக்கிச் செல்வோம் எனும் நிறுவன சமூக கடப்பாட்டிற்கேற்ப இந்த உதவி வழங்கப்படுகிறது என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனிடையே, பொதுமக்களும் இத்திட்டத்திற்கு உதவ முன்வருமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சைபர் ஜெயா, தாமரிண்ட் சதுக்கம், செராஸ் மை டவுன், மோண்ட் கியாரா, ஷா ஆலம் ஐ-சிட்டி மால், மெலாவத்தி மால் ஆகிய இடங்களில் இந்த உதவிப் பொருள்களை ஒப்படைக்கலாம் என அது தெரிவித்தது.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள 262 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதோடு வீடுகளில் குழாய் பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.