ஷா ஆலம், நவ 9- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட 600 வணிகர்களுக்கு உதவும் வகையில் இரு வாடகைக் கழிவுத் திட்டங்களை பி.கே.என்.எஸ். ரியல் எஸ்டேட் சென். பெர்ஹாட் வழங்குகிறது.
மார்ச் மாதம் வரை வாடகைத் தொகையை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு வாடகை விலக்களிப்பு வழங்குவது முதலாவது திட்டமாகும் என்று அந்நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகி ஷரில் முகமது ரஷிட் கூறினார்.
மே மாதம் வரையிலான வாடகைத் தொகையில் 50 விழுக்காட்டைத் செலுத்தியவர்களுக்கு அக்டோபர் முதல் ஒன்றரை மாதங்களுக்கு வாடகை விலக்களிப்பு வழங்குவது இரண்டாவது திட்டமாகும் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவ நாங்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களில் இதுவும் அடங்கும். பெரும்பாலான வணிகர்கள் முதலாவது திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாறியதைத் தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது வர்த்தகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.