பெட்டாலிங் ஜெயா, நவ 10- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே காணப்பட்ட ஒத்துழைப்பு உரிய பலனைத் தந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதில் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டமும் அடங்கும் என்று என்று அவர் சொன்னார். இத்திட்டத்தின் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 விழுக்காட்டை எட்டியுள்ளது என்றார் அவர்.
தற்போது இளையோரை மையமாக கொண்டு இந்த தடுப்பூசித் திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு 150,000 தடுப்பூசிகள் தயார் செய்யப்ட்டுள்ளன என்றார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் இதுவரை 89 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரை இலக்காக கொண்ட செல்வேக்ஸ் தடுப்பூசித் திடத்தின் வழி 370,000 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள ஷெரட்டோன் ஹோட்டலில் நடைபெற்ற பிரிட்டிஷ் வர்த்தக சபையுடனான வட்ட மேசை மாநாட்டில் அவர் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக மாநில அரசு செல்வேக்ஸ் திட்டத்தை தொடக்கியது. இத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்காக அது 20 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.