ஷா ஆலம், நவ 22- இதுவரை புதிதாக காலரா நோய் புதிதாக கண்டறியப்படவில்லை. எனினும், அந்நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிவதற்கு ஏதுவாக வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 21 ஆம் தேதி காலரா சம்பவம் ஒன்று கண்டறியப்பட்ட வேளையில் சம்பந்தப்பட்ட நபர் அந்நோயிலிருந்து முற்றாக குணமடைந்து விட்டதாக பொது சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்ட சித்தி மரியா கூறினார்.
சம்பந்தப்பட்ட நோயாளியுடன் தொடர்புடைய அனைவரிடமும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை பரிசோதனை மேற்கொண்டது. எனினும் அவர்கள் யாருக்கும் நோய் பீடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.
இருந்த போதிலும் இந்நோய்க்கு எதிரான தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகயை தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், வயிற்றுப் போக்கு, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் அரசாங்க அல்லது தனியார் கிளினிக்குகளுக்கு வரும் வரும் நோயாளிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று இங்கு செலாமாட் எனப்படும் குடும்ப வன்முறை தொடர்பான அவசரை தொலைபேசி சேவையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.