கடலோரத்தில் தடுப்பணைகளை நிர்மாணிக்க 52 லட்சம் வெள்ளி- ஜே.பி.எஸ். கோரிக்கை
ஷா ஆலம், நவ 26- கடல் பெருக்கு காரணமாக சேதமடைந்த தடுப்பணைகளை சரி செய்ய ஜே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை 52 லட்சம் வெள்ளியை கோரி மனு செய்துள்ளது.
சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதற்கு முன்னர் ஏற்பட்ட கடல் பெருக்கு சம்பவங்களால் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூரில் உள்ள தடுப்பணைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பணைகளை நிர்மாணிக்கும் பணியை அடுத்தாண்டில் மேற்கொள்வதற்காக ஜே.பி.எஸ் 52 லட்சம் வெள்ளியைக் கோரியுள்ளது என்றார் அவர்.