புத்ரா ஜெயா, நவ 27– பயணக் கட்டணங்களை உடனடியாக குறைக்கும்படி நாட்டிலுள்ள விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தலையீடின்றி கட்டணக் குறைப்பை விமான நிறுவனங்கள அமல்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
விமானக் கட்டணங்கள் குறிப்பாக சரவா மாநிலத்திற்கு விதிக்கப்படும் கட்டணம் பயணிகளுக்கு சுமையளிப்பதாக உள்ளது என்று தனது முகநூல் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் சரவா மாநிலத்திற்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் குறித்து பலர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
விமான நிறுவனங்களின் இச்செயல் சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமின்றி கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நீண்ட காலத்திற்கு பிறகு தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க செல்வோருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
விமானக் கட்டண உயர்வு மற்றும் பயண இடைவெளி தொடர்பில் சரவா மாநிலத்திலுள்ள பல அரசு சாரா அமைப்புகள் அண்மையில் தங்களின் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.