ஷா ஆலம், நவ 28- அடுத்தாண்டு முதல் ஷா ஆலமில் உள்ள ஜூப்ளி பேராக் அரங்கத்தை மையமாக கொண்டு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புச் சந்தையை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நடைமுறை எளிதானதாக இருக்கும் என்பதோடு பொதுமக்கள் ஒரே இடத்தில் தங்கள் கவனத்தை செலுத்துவதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என்று இளம் தலைமுறையினர், விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்பு சுற்றுப்பயண நிகழ்வுகளை நடத்துவதைக் காட்டிலும் ஆண்டுக்கு இரு முறை ஷா ஆலமில் பெரிய அளவில் வேலை வாய்ப்பு சந்தையை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு வேலை வாய்ப்பு பயணத் தொடரின் இறுதி கட்ட நிகழ்வை முடித்து வைக்கும் நிகழ்வுக்கு தலையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான இறுதி நிகழ்வாக இங்கு நேற்று நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 8,000 வேலை வாய்ப்புகளை புரோட்டோன், டிஆர்பி-ஹைக்கோம், பார்க்சன் கார்ப்ரேஷன், ஓல்ட் டவுன் கோப்பிதியாம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஐந்து வேலை வாயப்பு பயண நிகழ்வுகளில் 1,891 பேர் பங்கு கொண்டதோடு அவர்களி 484 பேருக்கு வேலை கிடைத்ததாக அவர் சொன்னார்.
மேலும் 832 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வானதாக அவர் மேலும் கூறினார்.