ஷா ஆலம், நவ 29- வரும் 2022 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 4.9 விழுக்காடாக இருக்கும் என ஐ.எம்.எப். எனப்படும் அனைத்துலக நிதியகம் கணித்துள்ளது. இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 5.9 விழுக்காடாக இருக்கும் எனவும் மதிப்பிடப்படுகிறது.
வளர்ச்சி விகிதத்தில் 0.1 விழுக்காடு குறைவாக மதிப்பிடப்படுவதற்கு உலக விநியோகச் சங்கிலித் தொடரில் ஏற்பட்ட இடையூறும் மேலும் மோசமாகும் என கருதப்படும் நோய்த் தொற்றும் காரணம் என்று கருதப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
விரிவான அளவில் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்வதற்கான ஆற்றல் மற்றும வலுவான நிதிக் கையிருப்பு காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் மத்தியில் பொருளாதாரம் மேம்படுவதற்காக சாத்தியம் இருந்தாலும் தேவை மற்றும் மற்றும் விநியோகத்தில் காணப்படும் நிலையற்றப் போக்கு, மூலப்பொருள்களின் விலையற்றம் ஆகிய காரணங்களால் பண வீக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொருள்களின் விலையேற்றம், பண வீக்கம், கோவிட்-19 புதிய வகை நோய்த் தொற்று பரவல்,உலக அளவில் மந்தமான தடுப்பூசி இயக்கம், விநியோகச் சங்கிலித் தொடரில் காணப்படும் மந்த நிலை ஆகியவை அடுத்தாண்டில் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் என எதிர்பாக்கப்படுவதாக 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.