ஷா ஆலம், டிச 1- பொதுமக்கள் மதிப்பீட்டு வரி, போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதம் மற்றும் வர்த்தக லைசென்ஸ் கட்டணங்களை எளிதான முறையில் சரிபார்க்கவும் செலுத்தவும் வகை செய்யும் ஈஸிபெய் செயலியை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அறிமுகம் செய்துள்ளது.
கிரடிட் கார்டுகள், எப்.பி.எக்ஸ். அல்லது இ-டொம்பேட் எனப்படும் மின்-பணப்பை முறையில் கட்டணங்களை எளிதான முறையிலும் பண பரிமாற்றத்திற்கான கூடுதல் கட்டணமின்றியும் செலுத்துவதற்குரிய வாய்ப்பினை இந்த செயலி வழங்குவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வீயூக நிர்வாக இயக்குநர் அஸ்பரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.
ரொக்கப் பணத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி மிகவும் விரைவாக கட்டணங்களை செலுத்த முடியும் என்பதோடு வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இராது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
விரல் நுனியில் பணபரிமாற்றத்தை உள்ளடக்கிய சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 2020-2025 வியூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அபராதம், வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டது, முன்பணம், லைசென்ஸ், கட்டிட உரிமம், உணவக கழிவு, நாய்களுக்கான லைசென்ஸ், வாடகை, நீர் நிர்வாகம், மண்டபம்/ விளையாட்டுக் கூடங்கள் மற்றும் பல்வகை பில்கள் ஆகியற்றை செலுத்துவதற்கு இந்த ஈஸிபெய் முறையை பயன்படுத்தலாம்.