பெட்டாலிங் ஜெயா டிச 5;- மக்கள் நீதிக் கட்சியின் 2021 ஆம் ஆண்டு தீபாவளி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உரையாற்றும் பொழுது, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநிலத்தை கோவிட் 19 பெருந் தொற்றிலிருந்து காப்பாற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
இதுவரையில் 170,000 பேருக்கு மேல் கோவிட் 19 பரிசோதனை நடத்தியுள்ளோம். நோய்தொற்றை எதிர்கொள்வதில் சிலாங்கூர் மாநிலம் பல முன் உதாரணங்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது.
மக்கள் பணத்தை சூரையாடியவர்களிமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். பல முறைகேடுகளிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்குண்டு என்றார். அதில் நாம் தவறினால், தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றியடையும், மக்கள் ஊழல் வாதிகளின் கைகளில் மீண்டும் சிக்குவார்கள் என்றார் அவர்.
தேர்தல் தோல்விகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல, தோல்விகளை கண்டு துவண்டு விட வேண்டாம், அதற்கு யார் மீதும் பழி சுமத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2004 ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நாம் ஒரே ஒரு மக்கள் பிரதிநிதியை தான் பெற்றிருந்தோம். சபா மாநில தேர்தலில் தோல்வி கண்டோம், ஆனால் நாம் தொடர்ந்து போராடி வந்ததனால், 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மட்டுமல்லாது, மற்ற மாநில ஆட்சிகளும் நமது கைக்கு வந்தது.
நாம் சிலாங்கூரை தற்காக்க வேண்டும். இது, நமது கோட்டை என்பதை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தினார். சிலாங்கூரை பாதுகாத்துக் கொள்வதில் அனைவரும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டின் நன்மைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக, மக்கள் நீதிக் கட்சி அதன் தொடர் போராட்டத்தில் இருந்து பின்வாங்க முடியாது, பின்வாங்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்