ஷா ஆலம், டிச 6- அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் உபரி வருமானம் ஈட்டும் நோக்கில் விவசாயத்தில் ஈடுபடுவதை அடுக்குமாடி குடியிருப்பு பசுமை வளாகத் திட்டம் ஊக்குவிக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டு நிர்வாக மன்றங்கள் எந்த முதலீடும் செய்யாமலே சுற்றுபுறத்தை அழகுறச் செய்வதிலும் இத்திட்டம் துணை புரியும் என்று வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இந்த பசுமை வளாகத் திட்டத்தின் கீழ் சிறந்த குடியிருப்பாக தேர்ந்தெடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் 10,000 வெள்ளி மானியம் வழங்குவதோடு விவசாயத்திற்கான உபகரணங்களையும் அளிக்கும் என்று அவர் சொன்னார்.
இந்நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை விவசாய பயிற்சி மற்றும் விவசாய தொழில்முனைவோர் பட்டறையில் கலந்து கொள்வதன் மூலம் சமூக விவசாயத் திட்டத்தில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை பெறும்படி அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாநாட் மையத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அடுக்குமாடி குடியிருப்பு பசுமை வளாகத் திட்ட விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக பகுதியில் உள்ள ஸ்ரீ பகவாலி அடுக்குமாடி குடியிருப்பு கூட்டு நிர்வாக மன்றம் வெற்றியாளராக தேர்தெடுக்கப்பட்டு 8,000 வெள்ளி ரொக்கப் பரிசை தட்டிக் சென்றது.