புத்ரா ஜெயா, டிச 10- பதப்படுத்தப்பட்ட உறை நிலையிலுள்ள கோழிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தற்காலிக நடவடிக்கையே என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகிறார்.
சில்லறை விற்பனையாளர்கள் நிலையில் அந்த உணவுப் பொருளின் விலையை நிலைப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
கோழிகளுக்கு விநியோகத்தை விட தேவை அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்கிறோம். சந்தையில் கோழியின் கையிருப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அதன் சில்லறை விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற மலேசிய வர்த்தக அடைவுநிலை விருதளிப்பு நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டத்தின் மூலம் கோழியின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
லங்காவி தவிர்த்து தீபகற்ப மலேசியாவில் சாதாரண கோழியின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு வெ.9.30 ஆகவும் மொத்த விற்பனை விலை வெ.8.00 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.