ஷா ஆலம், டிச 10- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று தினங்களில் சுமார் 6,000 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த இத்திட்டத்தின் மூன்று நாள் தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கிடைக்கப்பெற்றதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
ஒவ்வொரு கிளினிக்கிலும் தினசரி 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்காக இரு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
நம்மிடம் உள்ள 13 கிளினிக்குகள் வாயிலாக கடந்த மூன்று தினங்களில் 6,000 ஊக்கத் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செக்சன 13, செல்கேர் கிளினிக்கில் ஊக்கத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் இலவசமாக ஊக்கத் தடுப்பூசி செலுத்துவதற்காக 157,000 தடுப்பூசிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 7 ஆம தேதி கூறியிருந்தார்.