ஷா ஆலம், டிச 10- இவ்வாண்டு நவம்பர் 20 ஆம் தேதி வரை 231,533 ஊக்கத் தடுப்பூகளை சிலாங்கூர் சுகாதார இலாகா மாநில மக்களுக்கு வழங்கியுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மேலும் 157,000 பேருக்கு சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஊக்கத்தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சினோவேக் தடுப்பூசியை ஊக்கத் தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு பிரிவு கடந்த மாதம் 7 ஆம் தேதி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஊக்கத் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நிலையான வழிகாட்டு நெறிமுறை (எஸ்.ஒ.பி.) தொடர்பான விபரங்கள் முழுமைப் பெற்றப் பின்னர் சட்டமன்றத் தொகுதிகளில் இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பில் பலாக்கோங் உறுப்பினர் வோங் சியு கீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.