கிள்ளான், டிச 11- இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கு விநியோகிக்கும் பணி அடுத்தாண்டு முதல் காலாண்டில் முற்றுப்பெறும்.
பன்னிரண்டு மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு சேவையை வழங்கக்கூடிய இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 20,000 பேர் பயன்பெற்று வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த சிம் கார்டுகளை பொது மக்களுக்கு குறிப்பாக இணையம் வாயிலாக கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்துப் பணிகளையும் இணையம் வாயிலாக மேற்கொள்வதை நிர்பந்திக்கும் புதிய இயல்புக்கு ஏற்ப பொதுமக்களைத் தயார் படுத்தும் நோக்கில் இந்த இலவச தரவு சேவை வழங்கப்படுகிறது என்றார் அவர்.
இங்குள்ள பிங் வா தனியார் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவையை வழங்கக்கூடிய 70,000 சிம் கார்டுகளை மாநிலத்திலுள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்க 1 கோடிய 75 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.
தகுதியுள்ள நபர்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 200 சிம் கார்டுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.