ஷா ஆலம், டிச 13– தெலுக் பங்ளிமாகாராங் வட்டாரத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் திருமதி டீமளா தேவிக்கு “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
நீண்டகாலமாக தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த போதிலும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான இயந்திரங்கள் இல்லாத காரணத்தால் அவர் சிரமத்தை எதிர்நோக்கி வந்தார்.
சித்தம் அமைப்பின் அதிகாரி தீபன் சுப்பிரமணியம் திருமதி டீமளா தேவியிடம் சுமார் 8,500 வெள்ளி மதிப்புள்ள இந்த தையல் இயந்திரத்தை நேரில் சென்று ஒப்படைத்தார்.
ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் மூலம் வர்த்தக கடனுதவி பெறுவதற்கான வாய்ப்பும் அந்த பெண்மணிக்கு வழங்கப்பட்டது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்புவோருக்கு 30,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. தனது தையல் நிலையத்தை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள இந்த கடனுதவி அம்மாதுவுக்கு துணை புரியும்.
சித்தம் மற்றும் ஹிஜ்ரா அறவாரியத்தின் வாயிலாக வழங்கப்படும் உதவியை திருமதி டீமளா தேவி முறையாக பயன்படுத்தி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வார் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக தீபன் சுப்பிரமணியம் கூறினார்.