ஷா ஆலம், டிச 14- சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கார் நிறுத்தமிடக் கட்டண முறை அமலாக்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
வரும் ஜனவரி முதல் தேதி அமலுக்கு வரவேண்டிய இந்த கட்டண முறை பிறிதொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தின் வர்த்தக தொடர்பு பிரிவு அதிகாரி நோராய்னி அகமது கூறினார்.
அண்மையில் நடைபெற்ற செயல்குழு கூட்டத்தில் இத்திட்டத்தை ஒத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருதில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி சபாக் பெர்ணம் வட்டாரத்தின் முக்கிய பகுதிகளில் இலக்கவியல் கட்டண முறை உள்பட கார் நிறுத்தக் கட்டண முறை அமல்செய்யப்படவிருந்தது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்றினால் பொது மக்கள் எதிர்நோக்கி வரும் சிரமத்தை கருத்தில் கொண்டு இதனை ஒத்தி வைத்துள்ளோம் என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் இதிட்டம் அமல்படுத்தப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.