புத்ரா ஜெயா, டிச 15- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளும் திட்டங்களும் ஆக்ககரமான பயனைத் தருவதை உறுதி செய்வதற்கு 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத் (சட்டம் 342) திருத்தம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தம் மீதான விவாதங்கள் நீண்டு கொண்டே போனால் நாட்டில் தொற்று நோயைத் தடுப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படலாம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த 1988 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தை நாம் இயற்றிய போது பெருந்தொற்று பரவலை நாம் கவனத்தில் கொள்ளவில்லை. அப்போது நோய்ப் பரவல் மீது மட்டுமே நமது கவனம் இருந்தது. எனினும், தற்போது தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஏதுவாக அச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
1988 ஆம் ஆண்டுச் சட்டத்தை நாம் அமல்படுத்தினால் விதிகளை மீறும் பெரிய ஸ்தாபனங்களுக்கு கூடுதல் பட்சம் 1,000 வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை அந்த ஸ்தாபனங்களுக்கு அவ்வளவு சுமையாக இருக்காது என்பதால் நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிட்டாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதே சமயம், விதிக்கப்படும் அபராதத் தொகையும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது. தனி நபர்களையும் பெரிய ஸ்தாபனங்களையும் வேறுபடுத்த விரும்புகிறோம் என்றும் அவர் சொன்னார்.
விதிகளை மீறும் கழக மய அமைப்புகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 1,000 வெள்ளியிலிருந்து 10 லட்சம் வெள்யிக உயர்த்த சட்டம் 342 இன் 25 பிரிவில் திருத்தம் செய்யப்படுகிறது.
அதே சமயம், இத்தகைய குற்றங்களைப் புரியும் தனி நபர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 1,000 வெள்ளி அபராதம் 10,000 வெள்ளிக்கும் மேற்போகாத தொகையாக உயர்த்தப்படவுள்ளது.