ECONOMYMEDIA STATEMENTPBT

பத்தாங் காலி தொகுதியில் வர்த்தக வாகன லைசென்ஸ் உதவித் திட்டம் அமல்

ஷா ஆலம் டிச 17– பத்தாங் காலி தொகுதி மக்களுக்கான உதவித் திட்டங்களை அடுத்தாண்டிலும் தொடர தொகுதி ஒருங்கிணைப்பு மையம் உறுதி பூண்டுள்ளது.

இதன் அடிப்படையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வர்த்தக மற்றும் பொது போக்குவரத்து வாகன லைசென்ஸ் பெறுவதற்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று பத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பொது போக்குவரத்து வாகன லைசென்ஸ் (பி.எஸ்.வி.) அல்லது வர்த்தக வாகன லைசென்ஸ் (ஜி.டி.எல்.) வைத்திருக்கும் பட்சத்தில் ஓட்டுநர் வேலை வேலையை செய்வதன் வாயிலாக வருமானம் ஈட்ட முடியும் என அவர் சொன்னார்.

உள்ளூரில் உள்ள வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வாயிலாக 50 முதல் 100 பேர் வரை பயன் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கோவி-19 பெருந்தொற்று பரவலால் பலர் வேலை இழந்துள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் குடும்பத் தலைவர்களாக இருப்பது வேதனையான விஷயமாகும். ஆகவே, ஏற்கனவே வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பர்கள் வர்த்தக மற்றும பொது போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத்தைப் பெறுவதில் உதவ நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

இதன் மூலம் அத்தகைய தரப்பினர் கிராப் போன்ற மின் அழைப்பு வாடகை கார் அல்லது பொருள் விநியோகத் தொழிலில் ஈடுபடுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தவிர, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி பஸ் கட்டண உதவித் தொகுப்பை அறிமுகம் செய்வது குறித்தும் தாங்கள் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :