கோலாலம்பூர், டிச 23 - நாட்டின் பல பகுதிகளில் கடந்த வாரம் இறுதியில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் சொத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகளை எதிர் நோக்கியுள்ள மலேசியாவுக்கு ஜோர்டான் மற்றும் பஹ்ரின் ஆகிய நாடுகள் அனுதாபம் தெரிவித்துள்ளன. வெள்ளப் பேரழிவை எதிர்கொள்வதில் மலேசிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது நாட்டின் ஆதரவைப் புலப்படுத்துவதாக ஜோர்டான் நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹைதம் அபு அல் ஃபவுல், அறிக்கை ஒன்றில் கூறினார். மலேசிய அரசாங்கம் மக்கள் குறிப்பாக, இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார். பஹ்ரின் வெளியுறவு அமைச்சும் மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தது. மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் மற்றும் மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இன்று வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2019/10/ff919377081272b7dba2081965eb580e5d394b315fdb6.png)