ஷா ஆலம், டிச 24- நுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து செராஸ் 11 வது மைல் நீர் சுத்திகரிப்பு மையம் இன்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட உலு லங்காட் வட்டாரத்திலுள்ள 28 பகுதிகளில் 21இல் இன்று அதிகாலை 6.00 மணியவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
அந்த சுத்திகரிப்பு மையம் முழு ஆற்றலுடன் செயல்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான நீர் விநியோகம் கட்டங் கட்டமாக பயனீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும். எனினும், இந்நடவடிக்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் உடனுக்குடன் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அவ்வறிக்கை கூறியது.