ஷா ஆலம், டிச 27- வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் இரவு வரை நீடித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பல இடங்களில் மின் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து நேற்றிரவு தொடங்கி குப்பைகளை அகற்றும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
முன்பு பாதிக்கப்பட்ட பல பகுதிகள் இருள் சூழ்ந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலும் இருந்ததால் இப்பணிகளை இரவு வரை மேற்கொள்ள முடியாத நிலை இருந்ததாக அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சௌகர்யத்தை ஏற்படுத்தும் நோக்கில் பணி செயல்முறையை தாங்கள் மறுஆய்வு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து குப்பைகளை அகற்றுவதில் நாங்கள் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகிறோம். இப்பணிக்கு அதிகமான மனிதவளம் தேவைப்படுவதோடு அவர்களுக்கு தேவையான ஓய்வும் வழங்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கடந்த 19 ஆம் தேதி முதல் குப்பைபகளை அகற்றும் பணிகளை இந்த மாநில அரசின் துணை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணி இன்னும் ஒரு வார காலத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.