ஷா ஆலம், டிச 28 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாநில அரசு எரிவாயு சமையல் அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இக்தியார் சிலாங்கூர் பங்கிட் நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். அன்றாட வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையாக விளங்கக்கூடிய சமையல் அடுப்புகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவிருக்கிறோம் என்று மேலும் தெரிவித்தார். சிலாங்கூர் பாங்கிட் திட்ட நன்கொடை மற்றும் பிற அமைப்புகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர். நேற்று சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வெள்ள நிலைமை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக எம்.ஆர்.சி.பி. கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து 1,000 எரிவாயு அடுப்புகளை மாநில அரசு நேற்று பெற்றதாக அவர் மேலும் சொன்னார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/12/Dewan-mb-960x641.jpg)