Longgokan sampah dan barang yang rosak di Taman Sri Muda, Seksyen 25, Shah Alam pada 25 Disember 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் 40 விழுக்காட்டு குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், டிச 30- வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாவிலிருந்து 35 முதல் 40 விழுக்காடு வரையிலான குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் அகற்றியுள்ளது.

இப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணி கடந்த 25 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அது முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

நாங்கள் தினசரி லோரிகளில் ஏற்றிச் செல்லக்கூடிய 80 முதல் 90 குப்பைத் தோம்புகளை பயன்படுத்துகிறோம். இது தவிர 26 வாடகை லோரிகள் குப்பைகளை அள்ள பயன்படும் 18 டிராக்டர்கள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வட்டாரத்திலுள்ள 10,000 வீடுகள் மற்றும் 200 தொழிற்சாலைகளிலிருந்து வீசப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.

தாமான் ஸ்ரீ மூடா பெரிய பகுதியாக உள்ளதால் நாங்கள் எங்களிடமுள்ள அனைத்து தளவாடங்களையும் பயன்படுத்துவதோடு ஊராட்சி மன்றங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் உதவியையும் நாடியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணி முழுமையடைவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதால் பொது மக்கள் பொறுமை காக்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார். 

இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குப்பை அகற்றும் பணிகளையும் தாங்கள் கண்காணித்து வருவதோடு ஸ்ரீ மூடாவில் பணிகள் முற்றுப் பெற்றவுடன் இங்குள்ள பணியாளர்களும் இயந்திரங்களும் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

குப்பைகளை அகற்றும் பணி விரைவாக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :