கோம்பாக், டிச 31– சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 28 ஆம் தேதி முதல் இதுவரை ஐந்து பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்த உதவித் தொகையை பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உதவித் தொகையை வழங்கும் பணியில் அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு முதல் நாளன்று பெட்டாலிங் மாவட்டத்திலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக உலு லங்காட், கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களிலும் இப்பணி தொடர்கிறது என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் உதவித் தொகை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த உதவித் தொகையை மந்திரி புசார்தான் வழங்க வேண்டும் என்பதில்லை. மாறாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகளும் வழங்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் பங்கிட் திட்டத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசு விரும்பினால் அதனை தாங்கள் வரவேற்பதாகவும் அமிருடின் சொன்னார்.