கோலாலம்பூர், டிச 31– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 3,997 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,683 ஆக இருந்தது.
இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 54 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்றைய தொற்றுகளில் 1.6 விழுக்காடு அல்லது 64 அதிக தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பைக் கொண்டவையாகும். எஞ்சிய 3,993 சம்பவங்கள் அல்லது 98.4 விழுக்காடு லேசான அல்லது நோய்த் தாக்கம் இல்லாத ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.
நேற்று பதிவான சம்பவங்களில் 3,631 உள்நாட்டிலும் 366 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்தும் பரவின. மொத்தம் 3,984 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து முற்றாக தேறியவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 நோயாளிகளில் 281 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் 155 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நேற்று புதிதாக மூன்று நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இதனுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.