புத்ராஜெயா, டிசம்பர் 31 – மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நாடு முழுவதும் வெள்ளம் அபாயம் உள்ள 272 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் தெரிவித்தார்.
ஆறுகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு சாத்தியமுள்ள மதகுகளும் அவற்றில் அடங்கும் என்று அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து பகுதிகளையும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நாங்கள் இடங்களை கண்காணித்து வருகிறோம். ஆனால் டிசம்பர் 18 முதல் 20 வரை சிலாங்கூரில் ஒன்பது மாவட்டங்களில் அசாதாரண அளவு மழை பெய்ததால் தேடல் மற்றும் மீட்புப் பணிகளை வரையறுக்குட்பட்டு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சிப்பாங், உலு லங்காட், கோம்பாக் மற்றும் சபாக் பெர்ணம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு எங்கள் பணியாளர்களை அனுப்பினோம் எனினும். சிலாங்கூரைப் பொறுத்தவரை ஒரே இரவில் வெகு வேகமாக நீர் உயர்ந்ததால் மீட்பு நடவடிக்கைகளில் மக்களின் தேவைகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அவர் பெர்னாமாவிடம் நேற்று தனது அலுவலகத்தில் கூறினார்.
இதற்கிடையில், வெள்ளத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துரைத்த அவர், சிலாங்கூரில் அதிகமான மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டதால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.