ஷா ஆலம், ஜன 4– டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த 1,700 உறுப்பினர்கள் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவுக் கூடைகளை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பெட்டாலிங், கோல சிலாங்கூர், உலு லங்காட், கோல லங்காட் ஆகிய மாவட்டங்ளை மையமாக கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்செல் கெமான் கூறினார்.
பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வீடுகளின் உட்புறங்களை சுத்தம் செய்து விட்டதால் நாங்கள் வீடுகளின் வெளிப்புறங்களை சுத்தம் செய்வது மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பொருள்களை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் 110 க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்துள்ளோம். என்றார் அவர்.
டீம் சிலாங்கூர் அமைப்பில் உறுப்பினராக விரும்புவோர் bit.ly/SkuadBencanaTeamSelangor என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 013-5303578 என்ற எண்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.