ஷா ஆலம், ஜன 4– மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் கீறும் முறையிலான கூப்பன்களை வரும் மார்ச் மாதம் இறுதி வரை பயன்படுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த கூப்பன் முறை நேற்றுடன் முடிவுக்கு வரவிருந்த போதிலும் வாகனமோட்டிகளிடம் உள்ள கூப்பன்களின் கையிருப்பு தீரும் வரை பழைய நடைமுறையை தொடர்ந்து அமல்படுத்த முடிவெக்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு கால அமலாக்கத்தின் போது பெரும்பாலானோர் தங்கள் வசமுள்ள கூப்பன்களைப் பயன்படுத்தவில்லை. இக்கூப்பன்களை அவர்கள் பயன்படுத்தி முடிப்பதற்கு ஏதுவாக இத்திட்டத்தை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அமல் படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், எஸ்.எஸ்.பி. எனப்படும் சிலாங்கூர் ஸ்மார்ட் பார்க்கிங் செயலியை பதிவிறக்கம் செய்து இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறைக்கு அவர்கள் மாறுவதற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
இது வரை 17 வாகனமோட்டிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறிய அவர், எளிதான மற்றும் விரைவான இந்த இலக்கவியல் முறையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
தேதி, வருடம் மற்றும் நேரத்தை சுரண்டி பயன்படுத்தும் காகித கூப்பன்களை அகற்றி விட்டு அதற்கு பதிலாக இ-கூப்பன் முறையை மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. இதற்கான செயலியை ஏப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.