ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 20,086 பேர் 1,000 வெள்ளி உதவித் தொகை பெற்றனர்

ஷா ஆலம், ஜன 8- கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 20,086 பேர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையை இதுவரை பெற்றுள்ளனர்.

இந்த உதவி நிதி வழங்குவதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 2 கோடியே 1 லட்சத்து 96 ஆயிரம் வெள்ளி இதுவரை செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, இந்த பேரிடரில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விளக்கப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 6,483 பேரும் அதனை அடுத்து உலு லங்காட்டில் 3,600 பேரும்  கிள்ளானில் 3,508 குடும்பத்தினரும் இந்த உதவித் தொகையை பெற்றதாக அவர் சொன்னார்.

மேலும், சிப்பாங்கில் 2,326 பேருக்கும் கோல லங்காட்டில் 1,890 பேருக்கும் கோல சிலாங்கூரில் 1,548 பேருக்கும் கோம்பாக்கில் 645 பேருக்கும் உலு சிலாங்கூரில் 51 பேருக்கும் சபா பெர்ணமில் 35 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது என்றார் அவர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 10 கோடி  வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியிட்டார்.


Pengarang :