கோலாலம்பூர், ஜன 10- இம்மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவை பாரம்பரியம் கெடாமலும் சமய நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் மிதமான வகையில் கொண்டாடும் படி நாட்டிலுள்ள இந்துக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
தைப்பூச தொற்று மையம் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாவதாக மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கூறினார்.
கோவிட்-19 நோய் குறிப்பாக அதிக வீரியம் கொண்ட ஓமிக்ரோன் வகை உருமாற்றம் கண்ட தொற்று பரவாமல் தடுப்பதற்கு இந்த போன்ற கட்டுபாடுகள் அவசியம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
இன்னும் சில தினங்களில் அரசாங்கம் வெளியிடவுள்ள எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான செயலாக்க நெறிமுறைகள் கடுமையானவையாக இருக்கும் எனத் தாங்கள் எதிர் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டைப் போல் பக்தர்கள் இன்றி இரத வீதிவலமும் சீரான முறையில் பால் குட மற்றும் காவடி ஊர்வலமும் மட்டுமே நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது. எனினும், இவ்விகாரத்தில் விவேகமான முடிவை எடுக்கும் பொறுப்பை நாட்டிலுள்ள இந்துக்களின் கைகளில் உள்ளது என்றார் அவர்.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளை நிர்ணயிப்பதற்கு முன் தைப்பூச விழாவைக் கொண்டாடும் ஆலயங்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலித்துவ வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.