ஷா ஆலம், ஜன 11– வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக அத்தியாவசியப் பொருள்களை வாங்க 10,436.30 வெள்ளி தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.
கணவன்-மனைவி சிறு வயது பிள்ளை மற்றும் கைக்குழந்தை உள்ள குடும்பங்களுக்கு இந்த மதிப்பீட்டு தொகை பொருந்தும் என்று மலேசிய புள்ளி விபரத்துறை கூறியது.
அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களில் வீட்டு சமையலறை உபகரணங்கள், சுத்தம் செய்யும் மற்றும் பராமரிப்பு பொருள்களும் அடங்கும் என அது குறிப்பிட்டது.
இம்முறை ஏற்பட்ட வெள்ளம் வாழ்க்கை வழக்க நிலைக்கு திரும்புவதற்கு தேவையான நிதி ஆதாரங்களைத் தேட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அத்துறை வெளியிட்ட விளக்கப்படம் கூறியது.
ஒவ்வொரு குடும்பத்தின் தேவை மற்றும் சேதத்தைப் பொறுத்து மறுசீரமைப்புக்கான நிதியின் அளவும் மாறுபடும் எனவும் அத்துறை தெரிவித்தது.
அத்துறை வெளியிட்ட விளக்கப்படத்தில் பராமரிப்பு மற்றும் சேவைக்கு மிக அதிகமாக அதாவது 4,969.44 வெள்ளி தேவைப்படும். வாகனங்கள், மின்சார சாதனங்கள், கதவுகளை சரி செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான உத்தேச செலவினம் வருமாறு:
மின்சார சாதனங்கள் – RM3,325.89
வீட்டுத் தளவாடங்கள் – RM1,291.69
உடைகள்– RM322.22
சமையல் உபகரணங்கள் – RM174.31
சுத்தம் செய்யும் பொருள்கள் – RM96.73
குழந்தைகளுக்கான பொருள்கள்– RM94.84
சுய தேவைக்கான பொருள்கள் – RM76.95
தொழுகைக்கான பொருள்கள்முஸ்லீம்களுக்கு மட்டும்) – RM58.58
சுகாதார பொருள்கள்– RM25.65.