ஷா ஆலம், ஜன 12- சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய குற்றத்திற்காக கோம்பாக், தாமான் டேசா, மார்கெட்டில் உள்ள நான்கு கோழி அறுப்பு மைய உரிமையாளர்களுக்கு தலா 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், உணவு வர்த்தக மைய துணைச் சட்டத்தின் கீழ் அந்த நால்வரின் வர்த்தக உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டதாக செலாயாங் நகராண்மைக் கழகத்தின் வர்த்தகப் பிரிவு துணை இயக்குநர் அகமது பவுசி இஷாக் கூறினார்.
அந்த நான்கு வியாபாரிகளும் விடியற்காலை வேளையில் கோழிகளை அறுத்து அதன் உரோமங்கள், இரத்தம் மற்றும் இதர கழிவுகளை சந்தையின் பின்புறம் உள்ள கால்வாயில் வீசியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
அவர்களின் இச்செயலால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியதோடு பொதுமக்களிடமிருந்தும் இது குறித்து புகார் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
கோழிகளை அறுக்கும் பணியை மேற்காள்ளக் கூடாது என்றும் பதப்படுத்தப்பட்ட கோழிகளை மட்டுமே விற்க வேண்டும் என்றும் லைசென்சில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை அவர்கள் மீறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வியாபாரிகள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு வர்த்தக லைசென்சில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.