இஸ்கந்தார் புத்ரி, ஜன 17– கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதி தொடங்கி இதுவரை சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 36,000 குடும்பங்கள் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளன.
அடுத்த வாரத்தில் உதவி பெறுவோர் எண்ணிக்கை 40,000 ஆக உயரும் சாத்தியம் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதன் வழி இந்த பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை 4 கோடி வெள்ளியை எட்டும் என மதிப்பிடப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்த 11,194 பேருக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.
தற்போது பாதிக்கப்பட்டவர்களை வீடு வீடாக சென்று பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பணி இன்னும் ஒரு வார காலத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
இத்திட்டத்திற்கு முன்னதாக 36,000 குடும்பங்களை மட்டும் இலக்காக கொண்டிருந்தோம். ஆனால் இப்போது வரை அந்த எண்ணிக்கை 36,000 ஆக உயர்ந்து விட்டது. இந்த பதிவு நடவடிக்கை ஜனவரி 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் அந்த மனுபாரங்களை பரிசீலனை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்ற அவர் தெரிவித்தார்.
இங்குள்ள பண்டார் மெடினியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநில மக்களுக்கு 1,000 உணவுக் கூடைகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் கூறினார்.