ஷா ஆலம், ஜன 17- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கிய போதிலும் தைப்பூச விழாவைக் கொண்டாடுவதற்கு அந்த பேரிடர் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை.
பேரிடர் பாதிப்புகளுக்கு மத்தியில் மிதமான அளவிலாவது அந்த விழாவைக் கொண்டாடுவதில் பக்தர்கள் உறுதியாக உள்ளனர்.
சிலாங்கூரில், குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மனவேதனையை அளிக்கும் ஒரு சம்பவமாகும் என்று இல்லத்தரசியான திருமதி பி.பார்வதி (வயது 60) கூறினார்.
தைப்பூசத்தை கொண்டாடும் நேரத்தில் ஏற்பட்ட அந்த வெள்ளச் சம்பவம் எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. சேதத்திற்குள்ளான வீட்டை இன்னும் முழுமையாகச் சுத்தம் செய்து முடிக்கவில்லை.
இருந்த போதிலும், கடுமையான எஸ்.ஒ.பி. விதிகளுக்கு மத்தியிலும் தைப்பூச விழாவை கொண்டாடுவதற்குரிய வாய்ப்பு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.
மிதமான அளவிலும், ஒன்றுபட்டும், பிறருக்கு தீங்கிழைக்காமலும் வாழ வேண்டும் என்ற படிப்பினையை இந்த வெள்ளப் பேரிடர் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளது என்று ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாரான பார்வதி சொன்னார்.
பிறந்துள்ள இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய பிள்ளைகளுக்கு நல்ல படிப்பையும் கொடுக்க இறைவனை தாம் வேண்டிக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.