ஷா ஆலம், ஜன 23- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாவைச் சேரந்த 2,000 குடும்பங்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் தலா 1,000 வெள்ளி நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இத்தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காம் கட்டமாக இந்நிதி வழங்கப்படுவதாக என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
பாதிக்கப்பட்ட இந்த 2,000 பேரும் மத்திய அரசின் பந்துவான் வாங் ஏசான் திட்டத்தின் கீழ் மேலும் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசினால் வழங்கப்படும் 2,500 வெள்ளி மதிப்பிலான அன்றாட அத்தியாவசிய உதவித் திட்டம் (பி.கே.எச்.) விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிதி பலருக்கு இன்னும் கிடைக்காமலிருப்பதாக தனது பேஸ்புக் பதிவில் கணபதிராவ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் பங்கிட் சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு தொடக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது. இது தவிர வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை சீரமைப்பதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படுகிறது.