கோலாலம்பூர், ஜன 24- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று தணிந்து 3,856 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,116 ஆக இருந்தது.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 32 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று நோய்த் தொற்று பீடிக்கப்பட்டவர்களில் 35 பேர் அல்லது 0.9 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பையும் எஞ்சிய 3,821 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
மேலும், நேற்றையச் சம்பவங்களில் 492 வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவிய வேளையில் 3,364 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது. கோவிட்-19 நோயாளிகளில் 121 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 43 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
நேற்று 2,814 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 933 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் நேற்று புதிதாக பதிவான 13 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.