ஷா ஆலம், ஜன 26- காஜாங் நகராண்மைக் கழகத்திற்குட்பட்ட பகுதியில் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றுவதற்கு அமைக்கப்பட்ட மூன்று தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன.
சுங்கை லுய், 14வது மைல் மற்றும் தாமான் ஸ்ரீ நண்டிங்கில் அமைக்கப்பட்ட தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களிலுள்ள அனைத்து குப்பைகளும் லெங்காய் மிசி ரெஸ்து குப்பை அழிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அம்மூன்று மையங்களும் மூடப்பட்டன என்று நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.
தாமான் ஸ்ரீ நண்டிங் பகுதியில் குப்பை சேகரிப்பு மையம் இருந்த இடத்தை துப்புரவு செய்வது, நிலச்சீராக்கம் மற்றும் வேலி அமைப்பது போன்ற பணிகளை நகராண்மைக் கழகம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற காஜாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளத்திற்கு பிந்தைய அவசரகால துப்புரவுப் பணிக்கு 294,000 வெள்ளியும் ஸ்ரீ நண்டிங் குப்பை சேகரிப்பு மைய சீரமைப்பு பணிக்கு 200,000 வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.