ஷா ஆலம், ஜன 27– நாட்டில் கோழி முட்டை உற்பத்தி குறைந்ததற்கு நிச்சயமற்ற வானிலையும் ஒரு காரணமாகும் என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அகமது ஹம்சா கூறினார்.
விவசாயத் துறையின் உற்பத்திக்கு மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலின் பாதிப்புக்கும் நாட்டின் சீதோஷண நிலை காரணமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளம் மற்றும் கால்நடைத் தீவனங்களின் விலையேற்றம் ஆகியவையும் முட்டை உற்பத்தி பாதிப்புக்கு வழிகோலியது என்றார் அவர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் கோழி முட்டையின் உற்பத்தி பாணியைப் பார்த்தால் ஜனவரி மாதம் உற்பத்தி குறைந்து பிப்ரவரி மாதம் அதிகரிக்கும். காரணம் இது பருவகால நடைமுறையாகும் என்று அவர் தெரிவித்தார்.
சில்லரை விற்பனை நிலையில் கோழி முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் போக்கு காணப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அமைச்சு நிராகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.