ஷா ஆலம், ஜன 27- கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் துறைக்கு 9 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் நாடு முழுவதும் விவசாயம் சார்ந்த உணவுத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 7,578 பேர் பாதிக்கப்பட்டதாக விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரோனால்ட் கியாண்டே கூறினார்.
வெள்ளத்தினால் சிலாங்கூர் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறிய அவர், அந்த மூன்று துறைகளைச் சேர்ந்த 1,100 பேருக்கு 3 கோடியே 28 லட்சம் வெள்ளி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டது என்றார்.
இந்த வெள்ளப் பேரிடர் காரணமாக மிகவும் மோசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பான கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது சேத மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில விவசாய அமைப்பின் 44 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டிற்கு வழங்கிய உரையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவரின் உரையை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அகமது ஹம்சா வாசித்தார்.
சிலாங்கூர் மாநில விவசாய அமைப்பினால் கிள்ளான், கோல லங்காட், உலு லங்காட், பெரேனாங், சிப்பாங் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும 91 திட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்பு 19 லட்சம் வெள்ளியாக பதிவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.