ஷா ஆலம், ஜன 28- ஐம்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) நவீன விவசாய முறை மீது கவனம் செலுத்தவிருக்கிறது.
விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் கட்டத்திற்கு மாற பி.கே.பி.எஸ். தயாராகி வருவதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.
விவசாயத் துறையின் அனைத்து நிலைகளிலும் இலக்கவியலை அமல்படுத்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக தற்போதுள்ள நிலங்களை முழுமையாகப் பயன்படுத்தி நவீன விவசாய முறையை அமல்படுத்தும் அதே வேளையில் விவசாய தொழில்முனைவோருக்கும் உதவ விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஐம்பது ஆண்டுகளில் பி.கே.பி.எஸ். நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது. தொடக்கத்தில் செம்பனை நடவில் ஈடுபட்ட இந்நிறுவனம் தற்போது வர்த்தக மற்றும் சந்தை துறையில் கால்பதித்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.
பி.கே.பி.எஸ். கழகத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி பொன் விழா ஓட்டப்பந்தயம், சிலாங்கூர் புரூட் வேலி விழா, விவசாய உற்பத்தி பொருள்களின் மலிவு விற்பனை ஆகிய நிகழ்வுகளை தாங்கள் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.