கோலாலம்பூர், ஜன 28 - கடந்த மாதம் மலேசியாவின் பல பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளம் நாட்டிற்கு 610 கோடி வெள்ளி மதிப்பிலான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறை தெரிவித்தது. டிசம்பர் மத்தியிலும் ஜனவரி தொடக்கத்திலும் பல மாநிலங்களில் பெய்த கனமழையால் 120,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததோடு பலர் பலியானதாக அது கூறியது. பொதுச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு 200 கோடி வெள்ளி இழப்பும் வீடுகளுக்கு 160 கோடி வெள்ளி மதிப்பிலான சேதமும் ஏற்பட்டதாக அத்துறை வெள்ளம் தொடர்பான சிறப்பு அறிக்கையில் குறிப்பிட்டது. உற்பத்தி ரீதியிலான இழப்பு 90 கோடி வெள்ளியாகும். அவற்றில் பெரும்பாலானவை சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டன. இம்மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இழப்புகளில் பாதி சிலாங்கூரில் பதிவாகியுள்ளன என்று அவ்வறிக்கை கூறியது. அதோடு மட்டுமின்றி வாகனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் விவசாயத் துறைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதையும் அது சுட்டிக்காட்டியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 140 கோடி வெள்ளி மதிப்பிலான பண உதவி மற்றும் இதர வகை நிவாரணங்களை வழங்குவதாக மத்திய அரசு முன்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/01/PSX_20220105_164043-960x640.jpg)