கோலாலம்பூர், ஜன 28 - நாடு முழுவதும் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் (பி.பி.வி.) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தொடங்கி பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது. இந்த தடுப்பூசியை பொது மக்கள் முன்பதின்றி நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனியார் கிளினிக்குகளில் உள்ள தடுப்பூசி மையங்களைப் பொறுத்தவரை தங்களுக்கான ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தனியார் கிளினிக்கை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடீன் கூறினார். குறைவான இடவசதி கொண்ட தனியார் கிளினிக்குகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும் அங்கு எஸ்.ஒ.பி. விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். முன்பதிவின்றி ஊக்கத் தடுப்பூசி பெற வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதைக் காட்டும் இலக்கவியல் சான்றிதழை மைசெஜாத்ரா செயலியில் வைத்திருக்க வேண்டும் என்றும் கைரி கூறினார். இருப்பினும், விவேக கைப்பேசி இல்லாத காரணத்தால் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழ் கொண்டிராதவர்கள் தடுப்பூசி மையத்தில் லழங்கப்பட்ட அட்டையை உடன் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.